தவிர்க்கமுடியாதவைகள் என்பது என்னவோ உண்மைதான்.ஒருபக்கம்
கோவில்கள்,தேவாலயங்கள் இவற்றின் உற்சவகாலங்கள்,விரதகாலங்கள்,
என்று மக்கள் ஆன்மீகத்துக்குள் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு பூஜைகள் ,
புனஸ்காரங்கள்,நேர்த்திகள்,நிறைவேற்றல்கள் என்று வருடம் முழுவதும்
வளைய வருவார்கள்.இதைவிடுத்து,நல்ல நாள்,பெருநாள் என்று வருடத்தில்
பல நாட்கள் வந்தவண்ணமிருக்கும்.குறிப்பாக உழவர் திருநாள்,வருடப்பிறப்பு
தீபாவளி போன்ற பண்டிகைகள் இவற்றில் அடங்கும்.இவைதவிர கொம்புமுறி,
தேங்காய் உடைப்பு,தொழிலாளர் தினம் ஆகியவை தமிழர்களின் பாரம்பரிய
கொண்டாட்டங்களாக விளங்கும்.
மற்றும் திருமணவைபவங்கள்,பூப்புனித நீராட்டு,என்று பல சடங்குகளும்
தமிழர்களின் சம்பிரதாயங்கள் என்ற வட்டத்துக்குள் வருகின்றன.இவைகள்
எல்லாம் தாயகத்தில் காலம் காலமாக இருந்துவருகின்ற, எம் மக்களால் கட்டிக்காக்கப்படுகின்ற,வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த,பிரிக்கமுடியாத
சடங்குகளும்,சம்பிரதாயங்களும் ஆகும்.
இப்பொழுது எம்மக்களில் லட்சோப லட்சம் மக்கள் தாயகத்தை விட்டு வந்து
உலகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அத்தோடு மேற்கூறப்பட்ட அத்தனை அம்சங்களும் தமிழர்களின் அடையாளங்கள் என்பது உண்மையே.ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில்
இவற்றின் அவசியம் என்ன?இவைகளில் எல்லாம் அனுட்டிக்கப்பட வேண்டுமா? ஒரு அந்நிய தேசத்தில் இயந்திரமயமான வாழ்வியல் முறையில்
மாற்றுக் கலாச்சார சூழலில் இந்த சடங்குகளும்,சம்பிரதாயங்களும் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டுமா? இவை அவசியம்தானா? என்பதை சற்று
ஆராய்ந்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
புலத்தில் வாழும் எம் மக்களில் பலர் இன்னும் இந்த சடங்கு,சம்பிரதாயம்.
மற்றும் மூடநம்பிக்கைகள் என்று மூழ்கிபோய் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொரு சனி,ஞாயிறு தினங்களிலும் அநேகமானவர்களுக்கு பிறந்தநாள்,
திருமண விழா,அரங்கேற்ற நிகழ்வு,பூப்படைந்த பெண்ணுக்கு ஒரு விழா,
என்று ஏகப்பட்ட வைபவங்கள் இருக்கின்றன.ஒரு அவசரத்திற்கு,அல்லது
ஒரு முக்கியமான விடயத்திற்கு இவர்களை சந்திப்பதென்பது முடியாத
காரியம்.சொல்வார்கள்,"இன்று எங்களுக்கு அந்த பார்ட்டி,இந்தப் பார்ட்டி"
இருக்கிறதென்று.ஐந்து நாட்களும் இரவுபகலாக உழைத்த இவர்களுக்கு
வீட்டில் ஆறஅமர இருந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் இருப்பதற்கும்
முடிவதில்லை.காரணம் இந்த "பார்ட்டிகளுக்கு"இவர்கள் கண்டிப்பாக சென்றே
ஆகவேண்டும் என்ற ஒரு நிலை இருக்கிறது.சரி அது போகட்டும்......
இந்தக்காலக் கட்டத்தில் இந்த சடங்குகள்,சம்பிரதாயங்கள் தேவையா?
ஒரு வாழ்வு கல்யாணம் என்பது மிக முக்கியமான நிகழ்வுதான்,அதை யாரும்
மறுக்க முடியாது.எல்லா இனத்தவர்களிடமும் இந்த திருமண வைபவம்
இருக்கிறது.ஆனால் இந்த பெண்பிள்ளைகள் வயசுக்கு வந்துவிட்டார்கள்
என்று,அதை ஒரு சடங்காக,"சாமத்திய வீடு"என்று ஆடம்பரமாக எம்மக்கள்
கொண்டாடுவதை நாம் பார்க்கிறோம்.இது அவசியம்தானா?என்ற கேள்வி
இப்பொழுது எழுகிறது.
இப்போதெல்லாம் ஒன்பது,பத்து வயதிலேயே பெண் பிள்ளைகள் ஆளாகிவிடுவதை அவதானிக்க முடிகிறது.காரணம் இங்குள்ள உணவுகள்
காலநிலை மாற்றங்கள் காரணிகளாக இருக்கலாம்.இவர்களின் உடலில்
ஏற்படும் ஒரு மாற்றமே இந்த "பூப்படைதல்"என்று கொள்ளவேண்டும்.9 -10
வயசு பிள்ளைகளுக்கு அதுபற்றிய செய்தியும்,அறிவும் கொடுக்கப்பட
வேண்டியதே.இதெல்லாம் இப்பொழுது இவர்களின் பள்ளிக்கூடங்களிலே
சொல்லித்தரப்படுகின்றது. இந்தப் பிள்ளைகளின் மன நிலை என்ன?இவர்களின் மன உளைச்சல் என்ன?என்பதுபற்றியெல்லாம் பெற்றோர்
பார்ப்பது கிடையாது. பக்கத்து வீட்டுக்காரனுக்கோ,அல்லது பந்தாவுக்காகவோ
தன மகளை ஒரு சோடனைப் பொருளாக்கி பெரும் எடுப்பில் பலருக்கும்
காட்டி விடவேண்டுமென்றே விரும்புகிறார்கள்.தங்களின் பிள்ளைகளின்
விருப்பத்தைக்கூட இவர்கள் கேட்பதில்லை என்பதுதான் கொடுமையான
விடயம்.மேற்குலக நாடுகளில் இப்படியான நிகழ்வுகள் இல்லை என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி.ஏதோ சாட்டுக்கு இது எங்கள் கடமை,உரிமை,
சம்பிரதாயம்,கௌரவ பிரச்சினை,சொந்தங்கள்,உறவுகள் குறை சொல்வார்கள்
என்ற காரணங்களை சொல்லிக்கொண்டே இந்த "சாமத்தியவீடு"என்ற
பெயரில் சாமர்த்தியமாக கொடுத்ததை திரும்பவும் பெற்றுக்கொள்வதட்காக
நடத்தப்படும் ஒரு விழா என்றும் பலர் சொல்கிறார்கள்.இது எவ்வளவு
உண்மையோ தெரியாது.
அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் கூட "நீயா நானா"என்ற நிகழ்ச்சியில் இந்த பூப்புனித சடங்கு தேவைதானா என்ற கேள்வியுடன்
ஒரு விவாதமே நடந்தது.உங்களில் பலர் அதை பார்த்திருப்பீர்கள்.அதில்
கலந்துகொண்ட இளம் பெண்கள் இது முட்டாள் தனமானது,இந்த அறிவியல்
காலத்தில் இது அபத்தமானது.பழைய சம்பிரதாயங்கள் என்று கூறிக்கொண்டு
பெண்களை காட்சிப் பொம்மைகளாகவும்,கல்யாணத்திற்கும்,பிள்ளைப்
பெற்றுக்கொள்வதற்கும் எங்கள் பிள்ளை தயாராக இருக்கிறாள் என்று
தம்பட்டம் அடிப்பதற்கும் செய்யப்படுகின்ற ஒரு நிகழ்வுதான் இது என்று
காட்டமாக சாடியுள்ளார்கள்.இதில் அனைத்து பெண்களும் தங்களின் எதிர்ப்பை
தெரிவித்தார்கள்.அத்தோடு இந்த சடங்குக்கு பின்பு தாங்கள் படுகின்ற
அவஸ்தைகள்,கேலிகள்,கிண்டல்கள்,எல்லாம் தங்களுக்கு மன உளைச்சலை
தருவதாகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள்.அதற்க்கு எதிரணி
பெண்கள்,இல்லை,இது எங்களின் பாரம்பரியம்,எமது கலாச்சாரம் இதை
காலாகாலமாக செய்துவருகிறோம்.இதை மாற்ற முடியாது என்று வாதாடினார்கள்...
ஆக,இது மேற்குலக நாட்டில் வாழும் எம் தமிழ் பிள்ளைகளிடம் மட்டுமல்ல
தமிழ்நாட்டில் இருக்கும் இளம் பெண்களிடமும் இது ஒரு வேண்டப்படாத
சடங்காகவே பார்க்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் .இந்தக்
கட்டுரை பெற்றோரின் மனதை புண்படுத்தவோ,அல்லது அவர்களின்
செயல்களை கொச்சைப்படுத்தவோ அல்ல என்பதை தயவு செய்து புரிந்து
கொள்ளுங்கள்.உங்கள் பிள்ளைகளின் மன நிலையை அறிந்து கொண்டு
செயல் பட்டால் நல்லது என்பதை சொல்வதே நோக்கமாகும்...

0 Responses to “சடங்குகள்...?”
Post a Comment