Friday, January 27, 2012

உப்புசப்பற்ற உரையாடல்....?


 ஒரு இனத்தின் அடையாளம் அதன் மொழிதான் என்பது எல்லோருக்கும்
தெரியும்.பல அடையாளங்கள் இருந்தாலும் மொழியே ஒரு இனத்தின்
மூலாதாரம் என்றால் அது மிகை இல்லை.இந்த மொழியை பேசுவதிலும்
புரிவதிலும் கையாழ்வதிலும் எம்மில் பலருக்கு சிலவேளை பிரச்சினைகள்
எழுவதுண்டு.


அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை அழகாகப் பேசுபவர்களும்,அடுக்கு
மொழியில் பேசுபவர்களும்,அறிவார்ந்தமாக பேசுபவர்களும்,அநாயசமாக
பேசுபவர்களும்,ஆணித்தரமாக பேசுபவர்களும்,ஆக்ரோசமாக பேசுபவர்களும் எம்மில் பலர் இருக்கிறார்கள்.
இனிமையான சொற்கள்,கனிவான வார்த்தைகள்,போற்றுவதற்குரிய
எடுத்துக்காட்டுகள்,அறிவுள்ள பழமொழிகள்,ஆச்சரியப்படக்கூடிய முதுமொழிகள், காதுக்கினிய  பாடல்கள்,கருத்துச் செறிந்த உரைநடைகள்
என்று ஏகபட்ட வகையறாக்கள் தமிழ் மொழியில் இருக்கின்றனவே,,,
இவற்றை  ஓரளவிற்காவது தெரிந்து கொண்டு இருப்பதும்,பேசுவதும் நல்லதே.
நமது ஈழத் தமிழர்களின் பேச்சு சுவை மிக இனிமையானது ,இதை தமிழ் நாட்டு
தமிழ் அறிஞர்கள் கூட சொல்லியிருக்கிறார்கள்.அதிலும் வட்டார வழக்கு
பேச்சு,மாவட்டத்திற்கு மாவட்டம், பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடும்.
இதில் ஒவ்வொன்றிலும் ஓர் இனிமை இருக்கும்.யாழ்மாவட்டத்தில்
வடமராச்சிக்கும்,வலிகாமத்துக்கும் இடையில் வித்தியாசம் இருக்கும்.
வன்னிக்கும்,மன்னாருக்கும் இடையில் வட்டார வழக்கு வேறுபடும்.
கிழக்கிலே திருகோணமலைக்கும்,மூதூருக்கும் இடையிலும்,அம்பரைக்கும்
மட்டக்களப்புக்கும் இடையிலும் இந்த வட்டார வழக்குகள் வேறுபடும்.
இதுதவிர கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தமிழுக்கும்,கொழும்பு,கேகாலை
முஸ்லிம்களின் தமிழுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.ஆக பேச்சு
வழக்குகள் வேறுபட்டாலும் தமிழ் கேட்பதற்கும்,படிபதற்கும் இனிமையான
மொழிதான் என்பதில் எமக்கு சிறிதும் ஐயமில்லை.


என்ன?இந்த அழகிய மொழியை சிலர் உப்புச்சப்பற்று பேசும்பொழுதுதான்
மனது தாங்கொணா துயரம் அடைகிறது.குறிப்பாக நாம் ஒரு விவாதம்,
அல்லது கலந்துரையாடல் என்று ஒரு குறித்த விடயத்தைப் பற்றி
பேசும்போது அறிவுபூர்வமாக ஆராய்ந்து பேசுவோம் இல்லையா?இப்படியான
சந்தர்ப்பங்களில் சிலர் தாங்கள் என்ன பேசுகிறோம்,பேசுவது சரியாக
இருக்கிறதா?எடுத்துக்கொண்ட கருப்பொருளுக்குள் பேசுகிறோமா?என்று
சற்றேனும் சிந்திக்காமல்,எழுந்தவாரியாக,தங்களுக்கும் எல்லாம் தெரியும்
என்ற கோதாவில் பேசுவார்கள்.அவர்கள் பேசுவது அவர்களுக்கே புரியாது .
கேட்பவர்களுக்கு எப்படி புரியம் என்ற கவலையும் அவர்களுக்கு இல்லை.
எந்த விதமான பேச்சு வழக்கிலும் இவர்கள் பேசலாம் ஆனால்,சரியான
விதத்தில் அல்லது கனத்தில் பேசுகிறோமா?என்று தெரிந்துகொண்டு
பேசவேண்டும்.எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசி,மூக்கறுபடக்கூடாது.ஒரு
விடயம் பற்றி தெரியாவிட்டால் பரவாயில்லை.எல்லோருக்கும் எல்லாம்
தெரிவதில்லைத்தானே.அறியாத,தெரியாத விடயத்தை மற்றவர் சொல்ல
கேட்டு தெரிந்து தெளியலாம்.இதைவிடுத்து,தெரிந்தமாதிரி பாவனை செய்து
கொண்டு உரையாட முற்படுவது அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது.
இது பல வழிகளில் சம்பந்தப்பட்டவர்களை பாதிப்புக்குள் தள்ளிவிடும்.
ஒருபோதும் இவர்களால் புதிய தகவல்கள்,நடப்புகள்,அறிவுசார் விடயங்கள்
என்பனவற்றை அறிந்துகொள்ள முடியாமல் போய்விடும்.
அறிவியல் அசுரத்தனமாக உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த
காலக்கட்டத்தில் இப்படி அரைவேக்காட்டு மனிதர்களாக இருக்கத்தான் வேண்டுமா?என்பதை சிந்தித்துப் பார்த்தால்,நல்ல பயன் கிடைக்கும்.ஒரு
விடயம் பற்றி பேசுவதற்கு முன் பலதடவைகள் யோசித்துக்கொண்டு
தயார்படுத்திக் கொண்டு,அதில் கருத்தும்,கனதியும்,செறிவும்,செழுமையும்
அழகும்,ஆழமும் இருக்கிறதா?என்று தெரிந்துகொண்டு பேசமுற்பட்டால்
எல்லோருக்கும் நல்லது.அது அறிவையும்,ஆற்றலையும்,மொழிபற்றிய
மேன்மையையும் நமக்கு தரும் என்று கண்டிப்பாக நாம் நம்பலாம்.
நல்ல தமிழ் பேசுவோம்,நல்ல தமிழ் கேட்போம்.








        











0 Responses to “உப்புசப்பற்ற உரையாடல்....?”

Post a Comment